Saturday, January 7, 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கட் தொடர் சென்னையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) சார்பில் ஆண்டுதோரும் டுவென்டி-20 கிரிக்கட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கட் வாரியம்(பி.சி.சி.ஐ) மும்பையில் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 4ம் திகதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
கடந்த தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சமீபத்தில் ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்ட்டா நைட்ரைடர்ஸ் உட்பட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், 72 லீக் போட்டிகள், மூன்று பிளே-ஆப்(இறுதிச்சுற்றுக்கான தகுதிச் சுற்று), ஒரு இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கின்றன. பெங்களூருவில் இரண்டு பிளே-ஆப் போட்டிகளும், சென்னையில் ஒரு பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி(மே 27) நடக்கிறது.
லீக் போட்டிகள் அனைத்தும் முதல் மூன்று தொடரில் விளையாடியது போல நடக்கும். அதாவது ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் போட்டியில் விளையாடும்.
இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் பிளே-ஆப் போட்டியில் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறிவிடும்.
இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் 3, 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, முதல் பிளே-ஆப் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மூன்றாவது பிளே-ஆப் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.

No comments:

Post a Comment