Monday, April 9, 2012

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்காதது மகிழ்ச்சி: பிலான்டர்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடாதது தனக்கு மகிழ்ச்சி என்று தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வெர்னன் பிலான்டர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 200,000 அமெரிக்க டொலர்கள் அடிப்படை விலையைக் கொண்டிருந்த பிலான்டர், எந்த ஒரு அணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்பட்டிருக்கவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் பிலான்டர் தெரிவு செய்யப்படாததால் தற்போது அவர் இங்கிலாந்தில் பிராந்தியப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல்லில் பங்கேற்காததால் நன்மைகளும் காணப்படுகின்றன, தீமைகளும் காணப்படுகின்றன எனத் தெரிவித்த பிலான்டர், இவ்வாண்டு தான் தெரிவு செய்யப்படாமை தனக்கு சாதகமானது என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு யூலையில் தென் ஆப்ரிக்க அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்குரிய சிறந்த பயிற்சியாக இங்கிலாந்துப் பிராந்திய அணிகளில் விளையாடிய அனுபவம் பிலான்டருக்குக் காணப்படும் எனக் கருதப்படுகிறது.
7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிலான்டர், இதுவரை 51 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளரொருவர் 50 விக்கெட்டுக்களை வேகமாகப் கைப்பற்றியதில் பிலான்டர் இரண்டாவது நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐ.பி.எல் தொடர்: துடுப்பெடுத்தாடுகிறது டெக்கான் சார்ஜர்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மும்பை அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அணித்தலைவர் குமாரா சங்கக்கரா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பார்த்தீவ் படேல், அடுத்து களமிறங்கிய பாரத் சிப்லி இருவரும் தலா 1 ஓட்டங்களில் ரோகித் சர்மா மற்றும் மலிங்கா பிடியில் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் டிவான் 7 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய டேனியல் கிறிஸ்டியன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
சற்று முன்பு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 3.3 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அடிபட்ட தனது கைவிரல் படத்தை வெளியிட்டார் சச்சின்

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர்கருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவி வருகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 4ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் வீசிய 9வது ஓவரின் 5வது பந்து, சச்சினின் கை விரலில் பட்டு காயமானது.
இதனையடுத்து அப்போட்டியில் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த சச்சின், தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் ஓய்வு பெற்று கொண்டார்.
இதனால் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சச்சின் பங்கேற்கவில்லை. சச்சினுக்கு விரலில் தொடர்ந்து வலி இருப்பதால், இன்றைய போட்டியிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
இந்நிலையில் டுவிட்டரில் காயமடைந்த தனது கை விரலின் படத்தை வெளியிட்டுள்ள சச்சின் கூறியிருப்பதாவது, கடந்த நான்கு நாட்களாக எனது கைவிரலில் உள்ள ரத்த அழுக்குகளை தினமும் இரண்டு முறை நீக்கி வருகிறேன். இன்னும் எனது கை விரல் குணமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை இண்டியன்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கடந்த போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஒரு போட்டி மட்டும் நடைபெற உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இன்றைய 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்கு முன்பு, மும்பை இண்டியன்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தியது.
கடந்த போட்டியில் புனே அணியிடம் குறைந்த ஓட்டங்களில் சுருண்டது. சச்சின் காயமடைந்துள்ளதால் இன்றும் அவர் களம் இறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
அதிரடி வீரர் ரிச்சர்ட் லெவி எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். அதேபோல ரோகித் சர்மா, அம்பாதிராயுடு, பொல்லார்டு ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் அதிகமான ஓட்டங்களை எடுக்கலாம். பந்துவீச்சில் மலிங்காவின் யார்க்கர், ஓஜாவின் சுழல் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெக்கான் அணியை பொறுத்த வரையில், முன்னணி வீரர்கள் இல்லாமல் இருப்பது பலவீனமான ஒன்று. அணித்தலைவர் குமாரா சங்கக்கரா அணியுடன் இணைந்துள்ளதால் அதிரடி இருக்கும்.
டும்னி, ஷிகார்தவான், கேமரூன்ஒயிட், ஹாரிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுத்தால் வெற்றி பெறலாம்.
மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி வலுவான இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வியடைந்தோம்: கம்பீர்

துடுப்பாட்டம் சரியில்லாததால் தான் தோல்வியடைந்தோம் என்று தொடர் தோல்வியை சந்தித்து வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அணித்தலைவர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கூப்பர் 3 விக்கெட்டும், அமித்சிங், சுவான், திரிவேதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கொல்கத்தா அணி தொடர்ந்து 2வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் கவுதம் கம்பீர் கூறுகையில், மோசமான துடுப்பாட்டத்தால் தான் தோல்வியடைந்தோம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தானை 164 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தினர். ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் முன்னுக்கு வந்துவிடுவோம். 14 போட்டியில் 2 ஆட்டத்தில் தோற்றதை வைத்து நெருக்கடி என்று சொல்லி விட இயலாது என்றும் கூறியுள்ளார்.

சென்னை, மும்பை இம்முறை பட்டம் வெல்லாது: ஜோதிடர்கள் கணிப்பு

ஐபிஎல் 5வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை ஹாட்ரிக் பட்டம் பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
அதேவேளையில் அதிரடி வீரர்களும், ஆல்ரவுண்டர் பட்டாளங்களுடனும் உள்ள மும்பை அணியும் இம்முறை பட்டம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறது
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பில்லை என மும்பை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அல்லது டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியே பட்டம் வெல்லும் என அவர்கள் கணித்துள்ளனர்.
கிரக ராசிப்படி காம்பீருக்குதான் அதிக வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர். இந்த இரு அணிகள் தவிர புனே, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகளுக்கும் சான்ஸ் உண்டாம்.

வலுவான நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சந்தர்பால், பிராத்வைட், எட்வர்ட்ஸ் கைகொடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான ஸ்கோரை நோக்கி செல்கிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் டேரன் சமி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அட்ரியன் பரத்(22) சுமாரான தொடக்கம் கொடுத்தார். பின் இணைந்த கிரெய்க் பிராத்வைட், கிர்க் எட்வர்ட்ஸ் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது.
அவுஸ்திரேலிய வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டு ஏமாற்றினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் சேர்த்த போது டேவிட் வார்னர் பந்தில் எட்வர்ட்ஸ்(61) ஆட்டமிழந்தார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிராத்வைட்(57), பீட்டர் சிடில் வேகத்தில் வெளியேறினார். மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 390 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய சந்தர்பால் 80 ஓட்டங்களுடனும், ரோச் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கங்குலி அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடரில் நேற்று புனேயில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணியின் தலைவர் கங்குலி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
புனே அணிக்கு கங்குலி நல்ல தொடக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். இவர் 20 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பிரவீண் குமாரின் நேரடி த்ரோவில் ஜெசி ரைடர்(8) ஆட்டமிழந்தார்.
பின் உத்தப்பா, மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து அசத்தினர். பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், அதிவிரைவாக ஓட்டங்களை சேர்த்தனர். சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பெர்குசன்(3) ஏமாற்றினார். ஹர்மீத் சிங் பந்தில் உத்தப்பா(40) வீழ்ந்தார்.
போட்டியின் 18வது ஓவரை வீசிய ஹர்மீத் சிங் தொடர்ந்து இரு முறை பீமர்(துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேலே) முறையில் நோ-பால் வீசினார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி தவறு என்பதால் இவருக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சிய நான்கு பந்துகளை பிபுல் சர்மா வீசினார். இதில் மூன்று பந்துகளை ஸ்டீவன் ஸ்மித் சிக்சருக்கு அனுப்ப இந்த ஓவரில் மட்டும் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
பால்க்னர் பந்தையும் சிக்சருக்கு விரட்டிய ஸ்டீவன் 25 ஓட்டங்கள் எடுத்தார். புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. மனிஷ் பாண்டே(12) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அபத்தமாக அமைந்தது. டிண்டா பந்தில் எல்.பி.டபிள்யு.வில் இருந்து தப்பிய வல்தாட்டி, கிரீசில் நிற்க, அவசரப்பட்ட அணித்தலைவர் கில்கிறிஸ்ட் வீணாக ஓடி வந்தார். இதையடுத்து வல்தாட்டி(1) ஆட்டமிழந்து, தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.
சிறிது நேரத்தில் கில்கிறிஸ்டும்(6) ஆட்டமிழந்தார். மன்தீப் சிங்(24), அபிஷேக் நாயர்(24), டேவிட் ஹசி(18) தாக்குப் பிடிக்கவில்லை. நெஹ்ரா ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா 16 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, இரண்டாவது தோல்வியை பெற்றது. பிபுல் சர்மா(35), பிரவீண் குமார்(1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட சுப்ரதோ ராய் சகாரா மைதானத்தில், புனே அணி சாதித்துக் காட்டியது. ஏற்கனவே மும்பையை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, April 5, 2012

காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாட மாட்டார்: டிராவிட்

காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ராகுல் டிராவிட், ஶ்ரீசாந்த் இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவித்தார்.
தனது உடற்தகுதி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஶ்ரீசாந்த், பந்து வீசி பயிற்சி எடுத்தபோது கஷ்டத்தை உணர்ந்ததாக தெரிவித்தார். அத்தொடு 3-4 வாரங்களுக்குத் தான் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படலாம் என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீசாந்த் தவிர, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஷேன் வொற்சன், டினேஷ் சந்திமால் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் ஆரம்பகட்டப் போட்டிகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி - மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 27ம் திகதியே நிறைவடையவுள்ள நிலையில் பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருவதால் அப்போட்டி முடிவடையும் வரை டினேஷ் சந்திமால் - ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை காணப்படுகிறது.

சூதாட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் முகமது ஆமிர்

கிரிக்கெட் வீரர்களிடையே மேட்ச் பிக்ஸிங் உட்பட பல்வேறு முறைகேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐசிசி ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் வீடியோ குறும்படம் தயாரிக்கப்பட்டது.
5 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் மேட்ச்-பிக்ஸிங்கில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றவரான பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் தோன்றுகிறார்.
அதில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள ஆமிர், சிறை வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மிக மோசமான இடம். நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள். நான் முட்டாள் ஆக்கப்பட்டேன். எனக்கு துணிவு இல்லாததால் என்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதை யாரிடமும் சொல்லவில்லை.
எனவே வீரர்களாகிய உங்களை சூதாட்டக்காரர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐசிசி குழுவிடமோ அல்லது உங்களின் அணி நிர்வாகத்திடமோ தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் நான் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், 2 நோபால்களை வீசியதன் விளைவால் அடுத்த சில மணி நேரங்களில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, நோபால்களை வீசுவதற்கு சூதாட்டத் தரகர்களிடம் இருந்து பணம் பெற்றதாக பாகிஸ்தான் அணியின் அப்போதைய அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் சிக்கினர்.
இதுதொடர்பாக விசாரித்த லண்டன் நீதிமன்றம், சல்மான் பட்டுக்கு 30 மாதங்களும், முகமது ஆசிபுக்கு ஓர் ஆண்டும், முகமது ஆமிருக்கு 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்தது.
இவர்களில் ஆமிர் மட்டும் 3 மாதங்கள் மட்டுமே தண்டனையை அனுபவித்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

வலுவான நிலையில் இங்கிலாந்து

கொழும்பு டெஸ்டில் கெவின் பீட்டர்சன் சதம் அடிக்க இங்கிலாந்து அணி, 181 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின் டிராட், குக் அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். குக்(94), சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஹெராத் சுழலில் டிராட்(64) சிக்கினார்.
பின் அசத்தலாக ஆடிய பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதம் அடித்தார். இவர் 151 ஓட்டங்களுக்கு ஹெராத் பந்தில் வீழ்ந்தார்.
இயான் பெல்(18), பிரையார்(11) சோபிக்கவில்லை. சமித் படேல் 29 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இலங்கை சார்பில் ஹெராத் 6 விக்கெட், தில்ஷன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் இரண்டாவது இன்னிங்சை தொடக்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தற்போது 181 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் இலங்கை அணி, இக்கட்டான நிலையில் உள்ளது.